#

#

Wednesday, November 16, 2016

திருநின்றவூரில் மணல் கடத்தல் - டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி ; கூட்டாளிகளுக்கு வலை -





ஆவடி, -ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் கூவம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் இரவு நேரங்களில் அடிக்கடி மணல் திருட்டு நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் திருநின்றவூர், கொசவன்பாளையம், பொன்னியம்மன்மேடு, எம்ஜிஆர் தெருவை சேர்ந்த தமிழ்வாணன் (எ) யேசு (37) என்பவர் டிராக்டரில் மணல் அள்ளுவதற்கு சென்றுள்ளார்.பின்னர் அவரும் கூட்டாளிகளும் சேர்ந்து கூவம் ஆற்றில் மணல் அள்ளி டிராக்டரில் நிரப்பிக் கொண்டனர். 
பின்னர் மணலுடன் டிராக்டரை எடுத்துக்கொண்டு கூவம் ஆற்றிலிருந்து வெளியே வந்தனர்.அப்போது அவரது டிராக்டர் நிலைதடுமாறி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டர் உரிமையாளர் தமிழ்வாணன் டிராக்டரின் இன்ஜினுக்கு அடியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவலறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.அங்கு டிராக்டருக்கு அடியில் சிக்கியிருந்த தமிழ்வாணனின் சடலத்தை கைப்பற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

விளிஞ்சியம்பாக்கம் ஏரி உபரிநீர் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம்




ஆவடி: ஆவடி பகுதியில் விளிஞ்சியம்பாக்கம் ஏரி மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மழைக் காலத்தில் இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், கால்வாய் வழியாக பருத்திப்பட்டு ஏரியில் சென்றடையும். இந்த கால்வாய் கருமாரி அம்மன் கோயில் பிரதான சாலை, காமராஜர் நகர் மெயின் ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சலவையாளர் குடியிருப்பு வழியாக சுமார் 3 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது.

ஆரம்ப காலத்தில் 25 அடி அகலத்தில் இருந்த இந்த உபரிநீர் கால்வாய், முறையான பராமரிப்பில்லாததால் தற்போது பெரும்பகுதி ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. விளிஞ்சியம்பாக்கம் முதல் காமராஜர் நகர் பிரதான சாலை வரை 25அடி அகலம் கொண்டதாகவும், அதன் பிறகு ஆக்கிரமிப்பு காரணமாக 6 அடியாகவும் சுருங்கிவிட்டது. 

இதனால், மழைக்காலங்களில் இந்த கால்வாய் வழியாக உபரிநீர் வெளியேற முடியாமல் சரஸ்வதி தெரு, பாண்டியன் தெரு, ஜெயபிரகாஷ் நாராயணன் தெரு, வள்ளலார் தெரு, நேரு காலனி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால், நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. ஆண்டுதோறும் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாவதும், மக்கள் அவதிப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

மேலும், பல ஆண்டாக தூர்வாரப்படாததால் குப்பைகள் குவிந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதில், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதால் இப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே, உபரிநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குப்பையை சுத்தம் செய்து, தூர்வார வேண்டும் என இப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், வரும் மழைக்காலத்தில் மேற்கண்ட பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இனிமேலாவது அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படாமல் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆவடி: சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வராத புதிய டிக்கெட் கவுன்டர் : டிக்கெட் வாங்குவதற்கு தண்டவாளத்தை கடப்பதால் விபத்தில் சிக்கும் பயணிகள்

ஆவடி: சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் ரயில் நிலையம் உள்ளது. சுற்றுப் பகுதிகளான தண்டுரை, காமராஜர்புரம், சோழன் நகர், சார்லஸ் நகர், பாபு நகர், உழைப்பாளர் நகர், கக்கன்ஜி நகர், வள்ளலார் நகர், கோபாலபுரம், வெங்கடாபுரம், கருணாகரச்சேரி, சோராஞ்சேரி, அன்னம்பேடு, அமுதூர்மேடு, சித்துக்காடு, வயலாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.  பட்டாபிராம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் மற்றும் சென்னை நகர்களுக்கு தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோர்கள் சென்று வருகின்றனர். 

ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் டிக்கெட் கவுன்டர் உள்ளது. பயணிகள் இங்குள்ள தண்டவாளத்தை தாண்டிதான் டிக்கெட் கவுன்டருக்கு செல்ல வேண்டும். மேலும், சைடிங் ரயில் நிலையத்திற்கு செல்பவர்களும்  இங்குதான் டிக்கெட் வாங்க வேண்டும். முதல் பிளாட்பாரத்தில் டிக்கெட் வாங்கி கொண்டு மீண்டும் தண்டவாளத்தை கடந்து 2, 3வது பிளாட்பாரத்திற்கும், சைடிங் ரயில் நிலையத்திற்கும் செல்ல வேண்டியது உள்ளதால் பயணிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிர் இழக்கின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் ரயில் நிலையம் வெளியே டிக்கெட் கவுன்டர் அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

 இதனை அடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.7 லட்சம் செலவில் ரயில் நிலையத்தின் வெளியே டிக்கெட் கவுன்டர் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், ரயில்வே அதிகாரிகள் இதுவரை அந்த டிக்கெட் கவுன்டரை திறக்கவில்லை. இதுகுறித்து பலமுறை பயணிகள் நலச் சங்கம் சார்பில் ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், பயணிகள் தினசரி டிக்கெட் வாங்க கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே, விபத்தை தவிர்க்கவும், எளிதாக பயணிகள் டிக்கெட் வாங்கவும், புதிய டிக்கெட் கவுன்டரை திறக்க தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து விபத்து

ஸ்ரீபெரும்புதூர்,





ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில், இரண்டு பஸ்களுக்கும் நடுவில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ் பயணிகள் 10 பேர் காயம் அடைந்தனர்.
அரசு பஸ்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று மதியம் ஆவடி நோக்கி சென்று கொண்டு இருந்தது. அதற்கு பின்னால் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் வந்து கொண்டு இருந்தது.
அரசு பஸ்கள் இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல, 2 பஸ்களுக்கும் நடுவில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் ஊராட்சி பகுதியில் சென்ற போது ஆவடி செல்லும் அரசு பஸ்சுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென ‘பிரேக்’ பிடித்து லாரியை நிறுத்தினார்.
மோதல்
இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆவடி சென்ற அரசு பஸ் டிரைவர், லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை ‘சடன் பிரேக்’ போட்டு நிறுத்தினார். அந்த பஸ்சுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரும் மோட்டார் சைக்கிளை ‘பிரேக்’ பிடித்து நிறுத்தினார்.
அப்போது அவருக்கு பின்னால் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த அரசு விரைவு பஸ், முன்னால் ஆவடி நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
வாலிபர் பலி
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர், இரண்டு அரசு பஸ்களுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டார். பஸ் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
பலியான அந்த வாலிபர் யார்?, எந்த ஊர்? என்பது உடனடியாக தெரியவில்லை. அவர் கல்லூரி மாணவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், பலியான வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
10 பேர் காயம்
இந்த விபத்தில் ஆவடி சென்ற பஸ்சின் பின்பக்க கண்ணாடியும், சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. இரண்டு பஸ்களிலும் பயணம் செய்த பயணிகள் 10 பேர் காயம் அடைந்தனர். அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான வாலிபர் யார்? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆவடியில் அண்ணன்-தங்கை தூக்குப்போட்டு தற்கொலை








ஆவடி,

ஆவடியில் அண்ணன்-தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

திருமண ஏற்பாடு

சென்னை உள்ளகரம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மகன் சரவணன் (வயது 31). பட்டப்படிப்பு முடித்து விட்டு நங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

சரவணனுக்கு அவருடைய பெற்றோர் திருவேற்காட்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்தனர். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என சரவணன் கூறியுள்ளார். இது பற்றி பெண் வீட்டாரிடம் சரவணனின் பெற்றோர் தெரிவித்தனர். திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் பெண் வீட்டார் இதை ஏற்கவில்லை.

தூக்கில் தொங்கினர்

இதனால் மனமுடைந்த சரவணன் நேற்று ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் தன்னுடைய சித்தி வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடைய சித்தி வீட்டில் இல்லை. அவருடைய மகள் சரண்யா (23) மட்டும் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் சரவணனும், சரண்யாவும் வீட்டில் ஒரே மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று மாலை சரண்யாவின் தம்பி வீட்டுக்கு வந்த போது தன் அக்காளும், அண்ணன் சரவணனும் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

போலீஸ் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இருவரின் உடல்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன்-தங்கை தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆவடியில் பணாத்தை மாற்றுவதற்காக வரிசையில் நிற்கும் மக்கள்







திருவள்ளுர் மாவட்டம், ஆவடியில் உள்ள இந்தியன் வங்கியில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை மாற்றுவதற்காக பொதுமக்கள் இன்று காலை குவிந்தனர். வங்கி கொடுக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையில் ரொக்கமாக 4 ஆயிரம் பெற்றுச் சென்றனர். 

இதேபோல் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் காத்திருந்து தங்களது ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை மாற்றி சென்றுள்ளனர்.

ஆவடி அருகே வியாபாரி வீட்டில் 10 சவரன் கொள்ளை




ஆவடி, -ஆவடியை அடுத்த அயப்பாக்கம், அபர்ணா நகர், காவேரி தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து (35). அதே பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி திருப்பதி (28) மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.கடந்த 2 நாட்களுக்கு முன் பேச்சிமுத்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றுவிட்டார். இதன்பிறகு வீட்டில் தனியாக இருப்பதற்கு பயந்து, திருப்பதி தனது 2 குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு, அருகிலுள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பேச்சிமுத்துவின் வீட்டில் அவரது கடையில் வேலை செய்யும் ஊழியர் பாலுசாமி பாதுகாப்புக்கு தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று காலை பாலுசாமி வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் நேற்றிரவு பேச்சிமுத்துவின் வீட்டுக்கு பாலுசாமி திரும்பினார்.அப்போது பேச்சிமுத்து வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து பேச்சிமுத்துவின் மனைவி திருப்பதிக்கு தகவல் கொடுத்தார். அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பீரோவை பார்த்தபோது, அதில் இருந்த 10 சவரன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இது குறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் திருப்பதி புகார் செய்தார். இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார். - See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=99794#sthash.NXM2X9u1.dpuf

பள்ளி கட்டிடத்தின் 2வது தளத்தில் திடீர் அதிர்வு..! 4 மணி நேரம் பரபரப்பு..!!




சென்னையை அடுத்த, ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியாருக்கு சொந்தமான பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 700 மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி கட்டிடத்தின் 2வது தளத்தில் திடீரென அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவியர் உடனே வகுப்பறையை விட்டு வெளியே வந்து வளாகத்தில் குவிந்தனர்.
இதனைத்தொடர்ந்து, பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரிவித்த பள்ளி நிர்வாகம் அனைத்து மாணவர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. மறுநாள் மாணவர்கள் பள்ளிக்கு வந்தபோது, விரிசல் கட்டிடம் சீரமைக்காமல் வகுப்பறையில் மாணவர்களை அமர வைத்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் 300க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு விரைந்த ஆவடி போலீசார், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில், பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரில் பள்ளி கட்டிடத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்த பிறகே பள்ளி திறக்கப்படும். அதுவரை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது எனவும் நிர்வாகம் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர் பெற்றோர்கள். இதனால் பள்ளி வளாகத்தில் சுமார் 4 மணிநேரம் பரபரப்பு நிலவியது.

திமுக கவுன்சிலரின் தந்தை வெட்டிக்கொலை.. ஆவடியில் பதற்றம்

திருவள்ளுர்: ஆவடி நகராட்சி திமுக கவுன்சிலரின் தந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் ஆவடி நகராட்சி 3வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தவர் சிங்காரம். இவரின் தந்தை வீரராகவன்(65) இன்று மாலை ஆவடி டேங்க் பேக்டரி அருகில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்த வீரராகவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார் என்ற விவரமோ, எதற்காக கொலை செய்தார்கள் என்ற விவரமோ இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



ஆவடி ராணுவ மைதானத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.1 கோடி.. வாக்கிங் சென்றவர்களுக்கு ஜாக்பாட்

சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் சுமார் 1 கோடி ரூபாய் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆவடியில் உள்ள ராணுவத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று, காலை குவியல் குவியலாக கொட்டப்பட்டிருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை வாக்கிங் சென்றவர்கள் பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்தனர். தங்களால் முடிந்த பணத்தை அள்ளிக்கொண்டு 'அப்பீட்' ஆகினர். தகவல் பரவியதும் அருகேயுள்ள, வெங்கடேசபுரம், அம்பேத்கர் நகர், உழைப்பாளர் நகர், கரிமேடு, முத்தாபுதுப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பணத்தை அள்ளிச்சென்றதாக கூறப்படுகிறது.




ஆனால் அதுகுறித்த தகவல் இதுவரை காவல்துறைக்கு அளிக்கப்படவில்லையாம். அந்த பகுதியைச்சேர்ந்த ராணுவத்தில் உள்ள உயரதிகாரிகள்தான் தங்கள் பணத்தை கொட்டியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் வேறு இடத்திலிருந்து அப்பகுதிக்குள் வந்து பணத்தை கொட்டுவது சாதாரணமான விஷயமில்லை என தெரிகிறது. மைதானத்தில் கொட்டப்பட்டிந்த பணத்தின் மதிப்பு சுமார் 1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை

Site Search