சென்னையை அடுத்த, ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியாருக்கு சொந்தமான பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 700 மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி கட்டிடத்தின் 2வது தளத்தில் திடீரென அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவியர் உடனே வகுப்பறையை விட்டு வெளியே வந்து வளாகத்தில் குவிந்தனர்.
இதனைத்தொடர்ந்து, பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரிவித்த பள்ளி நிர்வாகம் அனைத்து மாணவர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. மறுநாள் மாணவர்கள் பள்ளிக்கு வந்தபோது, விரிசல் கட்டிடம் சீரமைக்காமல் வகுப்பறையில் மாணவர்களை அமர வைத்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் 300க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு விரைந்த ஆவடி போலீசார், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில், பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரில் பள்ளி கட்டிடத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்த பிறகே பள்ளி திறக்கப்படும். அதுவரை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது எனவும் நிர்வாகம் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர் பெற்றோர்கள். இதனால் பள்ளி வளாகத்தில் சுமார் 4 மணிநேரம் பரபரப்பு நிலவியது.
0 comments:
Post a Comment