#

#

Wednesday, November 16, 2016

விளிஞ்சியம்பாக்கம் ஏரி உபரிநீர் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம்




ஆவடி: ஆவடி பகுதியில் விளிஞ்சியம்பாக்கம் ஏரி மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மழைக் காலத்தில் இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், கால்வாய் வழியாக பருத்திப்பட்டு ஏரியில் சென்றடையும். இந்த கால்வாய் கருமாரி அம்மன் கோயில் பிரதான சாலை, காமராஜர் நகர் மெயின் ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சலவையாளர் குடியிருப்பு வழியாக சுமார் 3 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது.

ஆரம்ப காலத்தில் 25 அடி அகலத்தில் இருந்த இந்த உபரிநீர் கால்வாய், முறையான பராமரிப்பில்லாததால் தற்போது பெரும்பகுதி ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. விளிஞ்சியம்பாக்கம் முதல் காமராஜர் நகர் பிரதான சாலை வரை 25அடி அகலம் கொண்டதாகவும், அதன் பிறகு ஆக்கிரமிப்பு காரணமாக 6 அடியாகவும் சுருங்கிவிட்டது. 

இதனால், மழைக்காலங்களில் இந்த கால்வாய் வழியாக உபரிநீர் வெளியேற முடியாமல் சரஸ்வதி தெரு, பாண்டியன் தெரு, ஜெயபிரகாஷ் நாராயணன் தெரு, வள்ளலார் தெரு, நேரு காலனி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால், நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. ஆண்டுதோறும் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாவதும், மக்கள் அவதிப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

மேலும், பல ஆண்டாக தூர்வாரப்படாததால் குப்பைகள் குவிந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதில், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதால் இப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே, உபரிநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குப்பையை சுத்தம் செய்து, தூர்வார வேண்டும் என இப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், வரும் மழைக்காலத்தில் மேற்கண்ட பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இனிமேலாவது அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படாமல் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

0 comments:

Post a Comment

Site Search