#

#

Wednesday, November 16, 2016

ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து விபத்து

ஸ்ரீபெரும்புதூர்,





ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில், இரண்டு பஸ்களுக்கும் நடுவில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ் பயணிகள் 10 பேர் காயம் அடைந்தனர்.
அரசு பஸ்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று மதியம் ஆவடி நோக்கி சென்று கொண்டு இருந்தது. அதற்கு பின்னால் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் வந்து கொண்டு இருந்தது.
அரசு பஸ்கள் இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல, 2 பஸ்களுக்கும் நடுவில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் ஊராட்சி பகுதியில் சென்ற போது ஆவடி செல்லும் அரசு பஸ்சுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென ‘பிரேக்’ பிடித்து லாரியை நிறுத்தினார்.
மோதல்
இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆவடி சென்ற அரசு பஸ் டிரைவர், லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை ‘சடன் பிரேக்’ போட்டு நிறுத்தினார். அந்த பஸ்சுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரும் மோட்டார் சைக்கிளை ‘பிரேக்’ பிடித்து நிறுத்தினார்.
அப்போது அவருக்கு பின்னால் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த அரசு விரைவு பஸ், முன்னால் ஆவடி நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
வாலிபர் பலி
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர், இரண்டு அரசு பஸ்களுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டார். பஸ் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
பலியான அந்த வாலிபர் யார்?, எந்த ஊர்? என்பது உடனடியாக தெரியவில்லை. அவர் கல்லூரி மாணவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், பலியான வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
10 பேர் காயம்
இந்த விபத்தில் ஆவடி சென்ற பஸ்சின் பின்பக்க கண்ணாடியும், சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. இரண்டு பஸ்களிலும் பயணம் செய்த பயணிகள் 10 பேர் காயம் அடைந்தனர். அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான வாலிபர் யார்? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

Site Search