#

#

Tuesday, October 4, 2016

விவசாயம் செய்யும் ஐடி பெண்

ஆர்கானிக் கடைகள் தெருக்கு தெரு பெருகி வருகின்றன. அப்படி இருந்தும் அங்கு விற்கப்படும் பொருட்களின் விலை குறைந்தபாடில்லை. கேட்டால் எல்லாம் இயற்கை உரம் போட்டு தயாரித்தது என்கிறார்கள். ‘‘எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் பத்தாண்டுகளில் எல்லாமே ஆர்கானிக்காக மாறிவிடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்போது, சாதாரண கடைகளில் கூட ஆர்கானிக் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும். விலையும் குறையும்...’’ என்று அடித்து கூறுகிறார் ரேகா. இவர் சென்னையில் ஆர்கானிக் ஃபார்ம் மார்க்கெட் என்ற கூட்டுறவு சந்தையை அறிமுகம் செய்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

‘‘எங்க குடும்பம் விவசாய குடும்பம். அப்பா விவசாயி. நான் பொறியியல் பட்டப்படிப்பு படிச்சதே, அப்பாவின் விவசாய சம்பாத்தியத்தில்தான்.  என் கணவரின் குடும்பமும் விவசாய குடும்பம்தான். ரெட்ஹில்ஸ் - ஆவடிக்கு அருகே பாண்டேஷ்வரம் என்ற இடத்தில் எங்களுக்கு நிலம் உள்ளது. நானும் என் கணவரும் பொறியியல் படித்துவிட்டு ஐடி துறையில் வேலை பார்த்து வந்தோம்.

என்னத்தான் விவசாய குடும்பம் என்றாலும், நாங்களும் ரசாயண உரம் கொண்டுதான் விவசாயம் செய்து வந்தோம். அதனால் எங்களுக்கு உடல் நிலை அவ்வப்போது சரியில்லாமல் போனது. அப்போதுதான் நாம் சாப்பிடும் உணவுகளே இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்று உணர்ந்தோம். இந்த இடத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். 

ஐ.டி துறையில் நாங்கள் இருவரும் வேலை பார்த்து வந்தாலும் விவசாயத்தை நாங்கள் விடவில்லை...’’ என்று அழுத்தம் திருத்தமாக சொல்லும் ரேகா, ரசாயண உரம் கொண்டு விவசாயம் செய்தால், எந்த பயனும் இல்லை. ஒரு கட்டத்துக்கு பிறகு நிலத்தில் விளைச்சல் பார்க்க முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்தே தாங்கள் இயற்கை விவசாயத்துக்கு மாறியதாகவும் சொல்கிறார்.‘‘இதற்கு மட்டுமே ஒரு வருடம் ஆனது. பல ஆண்டுகளாக ரசாயணம் கொண்டு விளைவித்த நிலம் என்பதால் மண் வளம் அழிந்திருந்தது. அதை மாற்றி அமைக்க ஓராண்டு ஆனது.

மண் வளமாக மைக்ரோப்ஸ் அவசியம். அதனால் முதலில் தக்கப்பூண்டை கொண்டு மண்ணை உழுது அதை மக்க வைத்தோம். அதன் பிறகு கீரை வகைகளை விளைவித்தோம். கீரைகளுக்கு மண்ணை வளமாக்கும் தன்மை உண்டு. இயற்கை விவசாயத்தை பொறுத்தவரை ஒரே பயிரை விளைவிக்க கூடாது. மாற்று பயிரை விளைவிக்கும் போதும், ஊடு பயிரை செய்யும் போதும்தான் மண்ணின் வளத்தை பாதுகாக்க முடியும். அதாவது, நிலத்தில் நெல் பயிரை விளைவித்தால், மறுபக்கம் அகத்திக் கீரையை பயிர் செய்யலாம். 

அகத்திக் கீரைக்கு பூச்சிகளை தன் வசம் இழுக்கும் தன்மை உண்டு. இதன் மூலம் நெல் பயிரை பாதுகாக்க முடியும். அதே சமயம் அகத்திக் கீரையை 25 நாட்களில் அறுவடை செய்து மறுபடியும் விளைச்சல் செய்யலாம். இதன் வழியாக ஒரு வருமானமும் கிடைக்கும்.அகத்திக் கீரைக்கு அடுத்து உளுந்து போடும் போது அது 60 நாட்களில் விளைச்சல் கொடுக்கும். இப்படி ஒரே நேரத்தில் மூன்று விதமான பயிர்களின் விளைச்சலை பார்க்க முடியும். மண் வளமும் மாறாது. நிலத்தில் தண்ணீர் வளமும் அதிகரிக்கும்...’’ என்று சொன்ன ரேகா, இதன் பிறகு தன்னுடைய அனைத்து நிலங்களையும் இயற்கை விவசாயமாக மாற்றி அமைத்துள்ளார். 

‘‘என் மாமனார் முதலில் ஒரு சிறிய நிலத்தை பயிர் செய்ய கொடுத்தார். அந்த நிலம் விவசாயம் செய்யாமல் சும்மாதான் இருந்தது. நானும் என் கணவரும் அதை மாற்றினோம். விளைச்சலும் நன்றாக கிடைத்தது. எங்களின் சொந்த பயன் பாட்டுக்குப் போக மீதமும் இருந்தது. அதை அருகில் இருக்கும் ஆர்கானிக் கடைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தோம்.ஆனால், அதற்கான பணம் வந்து சேர ஏழேட்டு மாதங்களானது. அதேபோல் அரிசி, பருப்பு போன்ற பொருட்களை வாங்கிக் கொள்வார்கள். அதை சரியாக பராமரிக்காமல் சில நாட்களுக்கு பின் ‘வண்டு வருகிறது...’ எனதிருப்பிக் கொடுப்பார்கள்.

இதனால் எங்களுக்கு பெரும் பாதிப்புஏற்பட்டது. பொருளும் வீணானது. போக்குவரத்து செலவும் அதிகரித்தது.நாங்கள் பரவாயில்லை. வேறொரு வேலையை பார்த்தபடிதான் விவசாயம் செய்கிறோம். தவிர ஆர்கானிக் கடைகளின் அருகில் வசிக்கிறோம். ஆனால், சிறிய விவசாயிகளின் நிலை? இவர்கள் இப்படி பணம் கொடுக்க இழுத்தடித்தால், அவர்களால் எப்படி அடுத்த விளைச்சலில் கவனம் செலுத்த முடியும்? அதே போல் பொருட்களை திருப்பிக் கொடுக்கும்போது ஏற்படும் நஷ்டத்தை எப்படி தாங்கிக் கொள்வார்கள்?இந்த கேள்விகள் என்னை வட்டமிட்டபடியே இருந்தன. 

இந்த சமயத்தில்தான் அனந்து என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் சென்னை கொட்டி வாக்கத்தில் ஆர்கானிக் கடை ஒன்றை
நிர்வகித்து வருகிறார். பல விவசாயிகளிடம் இருந்து பொருட்களை நேரடியாக வாங்கி அவர் அதனை விற்பனை செய்கிறார். 
இதனால் விவசாயிகள் இடைத்தரகர்கள் தொல்லையின்றி நல்ல வருமானம் பார்த்தார்கள். இதை சரியாக செய்தால் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் ஆர்கானிக் உணவுகள் கிடைக்கும்படி செய்யலாம் என்று தோன்றியது. இதனை அடுத்துதான் ஆர்கானிக் ஃபார்மிங் கூட்டுறவு மார்க்கெட் அமலுக்குவந்தது...’’ என்று சொல்லும் ரேகா, இதை எட்டு பேருடன் இணைந்து தொடங்கியுள்ளார். 

‘‘விவசாயத்தில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்ததும் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். என் அப்பா முதலில் திட்டினார். ‘நாங்களே விவசாயத்தில் இருந்து விலகிட்டோம். நீங்க இப்ப என்ன செய்ய போறீங்க...’ என்று கேட்டார். நான் பிடிவாதமாக இருந்தேன். விளைச்சலையும்காண்பித்தேன்.

அனந்து மூலம் இயற்கை விவசாய அமைப்பின் உறுப்பினராக சேர்ந்தேன். அங்குதான் கூட்டுறவு அமைப்புக்கான விதை ஊன்றப்பட்டது. நாங்கள் எட்டு பேர் இணைந்தோம். திருச்சி, சேலம் என்று இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை சென்று சந்தித்தோம். அவர்களின் நிலத்தில் எந்த அளவுக்கு இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வு செய்தோம்.
இதன் பிறகே அவர்களிடம் இருந்து பொருட்களை வாங்க முடிவு செய்தோம்.

சிலர் இயற்கை விவசாயம் செய்வதாக சான்றிதழ் எல்லாம் காண்பிப்பார்கள். ஒரு சிறு விவசாயியால் அந்த சான்றிதழை அவ்வளவு எளிதாக வாங்க முடியாது. அதே போல் ஒரு சிலர் ரசாயன தொழிற்சாலைக்கு நடுவே உள்ள நிலத்தில் விவசாயம் செய்வார்கள். இப்படித்தான் பலரும் தாங்கள் இயற்கை விவசாயம் செய்து வருவதாக சொல்லி வருகிறார்கள். எனவேதான் நாங்கள் நேரடியாக சென்று பார்வையிடுகிறோம். ஆய்வு செய்கிறோம். எங்களுக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே அவர்களை எங்கள்
கூட்டுறவு மார்க்கெட்டில் இணைத்துக்கொள்வோம். 

இப்போது எங்க கூட்டுறவில் 16 கடைகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து கடைகளுக்கும் தேவை இருப்பதால், ஒரு விவசாயின் மொத்த விளைச்சலையும் நாங்க வாங்கிக் கொள்கிறோம். இதனால் அந்த விவசாயிக்கும் கணிசமான லாபம் கிடைக்கிறது.இன்னொரு முக்கியமான விஷயம். விலையை நாங்கள் நிர்ணயிப்பதில்லை. அந்த விவசாயியேதான் தன் பொருட்களுக்கான விலையை நிர்ணயிக்கிறார். எங்கள் நிலத்தில் விளையும் ஜீரகசம்பா அரிசியை கிலோ ரூ.75க்கு விற்கிறோம். 

ஆனால், சில விவசாயிகள் தங்கள் செலவுக் கணக்கை பார்த்து ரூ.100 என்று சொல்வார்கள். அவர்கள் குறிப்பிடும் விலைக்கே வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் லாபம் வந்தால் போதும். விவசாயிகள் அல்லது வாடிக்கையாளரின் வயிற்றில் அடித்து சம்பாதிக்க நாங்கள் விரும்பவில்லை...’’ என்ற ரேகா, தங்கள் கடை களில் பிராண்ட் பொருட்கள் விற்கப்படுவதில்லை என்கிறார். 

‘‘ஆர்கானிக் பொருட்களை ஒரு சிலர் பிராண்ட் வைத்து விற்கிறார்கள். அவை உண்மையில் ஆர்கானிக்தானா என்று நமக்கு தெரியாது. நாங்கள் நேரடியாக விவசாயிகளிடம் சென்று வாங்குவதால், அதன் தரத்தை கணக்கி முடியும். வாடிக்கையாளர்களும் நம்பி பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். எனவே பிராண்ட் என்று முத்திரை கொடுக்க விரும்பவில்லை. எங்கள் கடைகளில் எல்லா பொருட்களும் டப்பாக்களில்தான் இருக்கும். எண்ணெய் மற்றும் மாவு பொருட்களை மட்டும்தான் பாக்கெட்டில் அடைத்து விற்கிறோம். 

100 கிராம் முதல் கிலோ கணக்கு வரை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். நாட்டு காய்கறிகளான வெண்டைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய் எல்லாம் கிலோ 45 ரூபாய். அதே போல் கேரட், உருளை, பீட்ரூட் எல்லாம் கிலோ 55 ரூபாய் என விற்பனை செய்கிறோம். என்ன இருந்தாலும் ஆர்கானிக் பொருட்கள் மற்ற பொருட்களை விட கொஞ்சம் அதிக விலைதான். காரணம் இயற்கை விவசாயத்தில் எல்லா விவசாயிகளும் ஈடுபடவில்லை. இயற்கை விவசாயிகளால் நம்முடைய தேதவைக்குஏற்ப விளைச்சலை கொடுக்க முடியவில்லை. இயற்கை விவசாயம் என்ற பெயரில் பலர் கலப் படம் செய்து வருகிறார்கள். கலப்படம் செய்யும் விவசாயிகளால், ஒரே நேரத்தில் ஐந்து விதமான பொருட்களை கொடுக்க முடியும். 

ஆனால், சிறிய அளவில் இயற்கை விவசாயம் செய்பவர்களால் அந்த அளவுக்கு விளைச்சலை தர முடியாது. ஒரே காய்கறிகளைதான் அவர்களால் கொடுக்க முடிகிறது. விலை அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணம்...’’ என்று சொன்னவர் தன்னுடைய பணியை காலை ஐந்த மணிக்கே தொடங்கி விடுகிறாராம்.  ‘‘மொத்தம் 16 கடைகள். 10 விவசாயிகள். அனைவரும் தங்கள் விளைச்சல் காய்கறிகளை வண்டியில் ஏற்றி கோயம்பேட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.

எனவே காலை ஐந்து மணிக்கு நாங்கள் கோயம்பேடு சென்றுவிடுவோம். வண்டி மார்க்கெட்டுக்குள் நுழையும் போதே, அதில் உள்ள லோடுகளை இறக்கி விடுவோம். காரணம் வண்டி மார்க்கெட் உள்ளே சென்றுவிட்டால், அங்கிருந்து மூட்டைகளை எடுத்து வருவது சிரமம். எல்லா விவசாயிகளும் ஒரே ஊரில் வசிக்கவில்லை. எனவே ஒவ்வொரு ஊரில் இருந்தும் ஒவ்வொரு நேரத்துக்கு வண்டி வரும். அதனால் எல்லா வண்டிகளும் வந்த பிறகே காய்கறி மற்றும் பழ லோடுகளை பிரித்து எங்கள் கடைகளுக்கு கொடுப்போம். இதன் பிறகுதான் வியாபாரம். 

கடந்த இரண்டு வருடங்களாக இப்படித்தான் எங்கள் வியாபாரம் நடக்கிறது. எங்கள் கடைகளுக்கு என்று சில கோட்பாடுகள் உண்டு. முன்பே சொன்னபடி பிராண்ட் பொருட்களை விற்க மாட்டோம். ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், 16 பேரின் ஒப்புதலும் தேவை. பாரம்பரிய உணவு பொருட்களை மட்டுமே விற்பனை செய்கிறோம். அரிசி கூட பாரம்பரிய அரிசிகள்தான். நாங்கள் ஒவ்வொருவரும் மாதம்தோறும் இரண்டு விவசாயிகளை நேரில் சென்று பார்க்கிறோம். அவர்களை இயற்கை விவசாயத்துக்கு மாறச் சொல்கிறோம். கூடவே, இயற்கை விவசாயம் செய்பவர்களையும் சந்தித்து அவர்களது பொருள் எங்கள் தேவைக்கு ஏற்ப உள்ளதா என்று கணித்து எங்களுடன் இணைத்துக் கொள்கிறோம். 

எங்களிடம் வாங்க வருபவர்கள் அவரவர் கையில் பையுடன் வரவேண்டும். அப்படிஇல்லாதவர்களுக்கு நாங்கள் துணி பை தருகிறோம். அதற்கு ரூ.20 கட்டணத்தை தனியாக வசூலிக்கிறோம். அடுத்த முறை வரும் போது அந்த பையை திருப்பி கொடுத்தால் ரூ.20-ஐ திருப்பித் தருகிறோம். மற்றபடி ப்ளாஸ்டிக் பைகளைநாங்கள் பயன்படுத்துவதில்லை.ஒன்று தெரியுமா கார் ஷெட் அல்லது வராண்டாவில்தான் முதலில் விற்க ஆரம்பித்தோம். அதன் பிறகுதான் கடைகளாக மாறியது...’’ என்று சொல்லும் ரேகா, இன்னும் பத்து வருடங்களில் எல்லாமே இயற்கை விவசாயமாக மாறிவிடும் என்கிறார்.

‘‘இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட் களின் விலை மற்ற மார்க்கெட் பொருட்களை விட அதிகம்தான். ஆனால், இந்த விலை வித்தியாசம் கண்டிப்பாக குறையும். எல்லாரும் இயற்கை உணவை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அதேபோல் அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும். அப்போதுதான் நம் சமூகம் ஆரோக்கியமாக மாறும்...’’ என்கிறார் அழுத்தம்திருத்தமாக. 

0 comments:

Post a Comment

Site Search