ஆவடியைச் சேர்ந்த என்.பாபு கணேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஆவடி நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
இத்திட்டம் 2 ஆண்டுகளில் முடிந்திருக்க வேண்டும். குறித்த காலத்தில் நிறைவு பெறாததால் 2009-ல் போராட்டங்கள் நடை பெற்றன. அதன்பிறகும், இத்திட்டம் முழுமையாக முடியவில்லை. எனவே, தாமதமாகும் பணிகளை விரைந்து முடித்து குடிநீர் வழங்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவடி நகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘குடிநீர் திட்டத்தின் 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. கடந்த ஒரு வாரத்தில் 100 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.
‘அனைத்து இணைப்புகளும் எப்போது வழங்கப்படும்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், ‘ஒரு மாதத்துக்கு 1,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்’ என்றார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ‘‘ஏற்கெனவே குடிநீர் இணைப்பு கேட்ட 18 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. நீங்கள் சொல்லும் கணக்குப்படி, இவற்றுக்கு இணைப்பு வழங்கவே 18 மாதங்கள் ஆகும். 2 ஆண்டுகளில் முடிக்கவேண்டிய திட்டத்துக்கு ஏற்கெனவே 7 ஆண்டுகள் ஆகிவிட்டன.
எனவே, அனைத்து குடிநீர் இணைப்புகளையும் ஆவடி நகராட்சி நிர்வாகம் விரைந்து வழங்கி, இந்த உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் தாமதம் ஏற்படாமல் இருக்க வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும்’’ என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
0 comments:
Post a Comment